தமிழக கவர்னர் ஆர்.என் ரவியை எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது, மழை வெள்ள பாதிப்பு, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர், நிருபர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழகத்தில் உளவுத்துறை செயலிழந்து இருக்கிறது. கோவை சம்பவத்தை தமிழக உளவுத்துறை சரியாக கையாளவில்லை. மக்கள் அதிகம் கூடும் இடத்தில் குண்டுவெடிப்பு நடந்திருந்தால் பாதிப்பு அதிகமாயிருக்கும். பலர் உயிரிழக்க நேரிட்டிருக்கும். தீவிரவாதம் என்றாலே உளவுத்துறைக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கும். இந்த குண்டுவெடிப்பைத் தடுத்திருக்கலாம். கள்ளக்குறிச்சி கனியாமூர் சம்பவத்தில் முன்கூட்டியே விசாரணை நடந்திருந்தால் வன்முறை, கலவரம் ஏற்பட்டிருக்காது.
திமுக அரசு என்றாலே கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் தான். அனைத்துத் துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. திமுக ஆட்சியில் தற்போது மருந்து தட்டுப்பாடு என்பதை அமைச்சரே ஒத்துக்கொண்டுள்ளார். உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தை திமுக அரசு பறித்துவிட்டது. ‘நம்ம ஊரு சூப்பரு’ விளம்பர பேனரில் மெகா ஊழல் நடந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரே ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டுள்ளது. பணி செய்வதற்கு முன்னரே, திமுக அரசு நிதி வழங்கி விடுகிறது. இதுவே திமுக ஊழலுக்கு உதாரணம். டெண்டர் இல்லாமல் பார் நடத்துதல், 24 மணி நேரமும் மது விற்பனை என டாஸ்மாக்கிலும் மெகா முறைகேடு நடந்து வருகிறது. திமுக அரசு ஒரு திறமையற்ற அரசு. கவர்னரை திமுக விமர்சிப்பது வாடிக்கையான ஒன்று. கவர்னரின் செயல்பாடு நன்றாக உள்ளது. கவர்னர் தான் திமுகவை தட்டிக்கேட்க வேண்டும். ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க கவர்னரிடம் வலியுறுத்தினோம். தமிழக கவர்னர் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்’ என்றார்.
மேலும், கவர்னருடனான சந்திப்பின்போது, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, , விஸ்வநாதன், சி.வி.சண்முகம் ஆகியோரும் உடன் இருந்தனர்.