தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்யும் என்றும், மேலும், வரும் 20 ஆம் தேதி கனமழையும், வட தமிழகத்தில் வரும் 21, 22 ஆம் தேதிகளில் மிககனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, கடலில் உள்ள தங்கு படகுகள் அனைத்தும் துறைமுகங்களுக்கு திரும்ப வேண்டும் என, கடலூரில் மீன்வளத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்றும், படகு, மீன்பிடி வலை உள்ளிட்டவற்றை பாதுகாப்பாக வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.