தென் சென்னை திமுக வர்த்தக அணி நிர்வாகி சைதை சாதிக் கடந்த 26ஆம் தேதி ஆர்.கே நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின்போது பா.ஜ.க பெண் நிர்வாகிகளான குஷ்பு, நமீதா, கௌதமி, காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் குறித்து தரக்குறைவாகப் பேசிய வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பா.ஜ.க மகளிர் அணி பொதுச் செயலாளர் நதியா தலைமையில் வந்த பெண் நிர்வாகிகள் தங்கள் கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவதூறாகப் பேசிய தி.மு.க நிர்வாகி சைதை சாதிக் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்திருந்தனர். இந்த புகார் தொடர்பான விசாரணை சைபர் கிரைம் பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பா.ஜ.க பெண் நிர்வாகிகளை அவதூறாகப் பேசிய வழக்கில் தி.மு.க வர்த்தக அணி நிர்வாகி சைதை சாதிக் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல், ஆபாசமாக பேசுதல், குறிப்பிட்ட சமுதாய மக்கள் பற்றி தரக்குறைவாகப் பேசுதல், பெண்களின் மானத்துக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் பிரிவு போலீசார் சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.