தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 22ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த டி.ஜி.பி. உள்ளிட்டோரிடம் அனுமதி கோரி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஊர்வலம் நடத்த அனுமதிக்க காவல்துறைக்கு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 9 பேர் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார். அப்போது, அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். ஆனால், சட்டம் – ஒழுங்கு பிரச்சினை காரணமாக பல மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று (அக்டோபர் 31ஆம் தேதி) பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் வருகிற நவம்பர் 6ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டதுடன் அந்தந்த மாவட்டத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு அனுமதி அளிக்குமாறு மாவட்ட எஸ்.பி.க்களுக்கு தமிழக டி.ஜி.பி. அறிவுறுத்தி உள்ளார்.