கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. இந்த திரைப்படம், கன்னட திரையுலகில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரூ.17 கோடி மதிப்பீட்டில் உருவான காந்தாரா திரைப்படம் கன்னடத்தில் மட்டும் ரூ.100 கோடி வசூலைப் பெற்றுள்ளதாகவும் மேலும், உலக அளவில் ரூ.170 கோடி வசூலை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இத்துடன், ரூ.200 கோடிவரை இந்த திரைப்படம் வசூலைக் குவிக்கும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தனக்கு பிடித்த படங்களை பாராட்டு வழக்கம் கொண்ட நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் காந்தாரா படத்தைப் பாராட்டி எழுதியுள்ளார். அதில், ”தெரிந்ததை விட தெரியாதது அதிகம் – இதனை காந்தாராவில் சிறப்பாக சொல்லியிருக்கிறார்கள். என் உடல் சிலிர்த்தது. ரிஷப் ஷெட்டி, எழுத்தாளர், இயக்குநர், நடிகர் என உங்கள் பணி சிறப்பாக இருந்தது. இந்திய சினிமாவின் சிறப்பான படத்தை கொடுத்ததற்காக ஒட்டுமொத்த நடிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.