முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா இன்று யாகசாலை பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த நிலையில், இன்று தொடங்கும் யாகசாலை பூஜை வரும் 29ஆம் தேதி மாலை வரை காலை மாலை என இரு வேளைகளிலும் நடக்கவுள்ளது. முன்னதாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் இன்றி கந்த சஷ்டி விழா நடந்த நிலையில், இந்தாண்டு கட்டுபாடுகள் விலக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் பச்சை ஆடையணிந்து அரோகரா கோஷம் முழங்க சஷ்டி பூஜையில் பங்கேற்று விரதத்தைத்தொடங்கியுள்ளனர். இதையடுத்து, வரும் 30ஆம் தேதி மாலை முருகன், சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இதைத்தொடர்ந்து, 31ஆம் தேதி திருக்கல்யாணத்துடன் கந்த சஷ்டி விழா நிறைவு பெறுகிறது.