உக்ரைன் நாட்டின் மீது ரஷிய நாட்டின் ராணுவம் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி கடந்த 7 மாதங்களுக்கு மேலாக போர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரால் இரு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலியாகி இருப்பதுடன் பல லட்சம் பேர் நாட்டைவிட்டு வெளியேறி அகதிகளாகியுள்ளனர். கொரொனாவுக்கு பின்னான பொருளாதர மீட்பை மேலும் அதலபாதாலத்துக்கு தள்ளும் விதமாக போர் காரணமாக உலக அளவில் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசியல், பொருளாதாரம், கல்வி, மருத்துவம், நாடுகளுக்கு இடையான நட்புறவு, மனித மான்பு போன்ற எல்லா கூறுகளும் கேள்விக்குறியாகியுள்ளது. இதையடுத்து, போரை நிறுத்த நடத்தப்பட்ட பல கட்டப் பேச்சுவார்த்தையும் பலனளிக்கவில்லை. இந்த நிலையில், தற்போது உக்ரைனிடமிருந்து கைப்பற்றிய 4 நகரங்களை ரஷியா தனது நாட்டுடன் இணைத்துக்கொண்டதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், உக்ரைனின் 4 நகரங்களை ரஷ்யா தன்னுடன் இணைத்ததை கண்டித்து ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 143 நாடுகள் வாக்களித்துள்ளன. 5 நாடுகள் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன நிலையில், இந்தியா உள்பட 35 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளது. முன்னதாக, இரு நாடுகளுடன் நட்பு பாராட்டி வரும் இந்தியா ஐ.நா.வில் உக்ரைன் – ரஷியா போர் தொடர்பாக நடந்த அனைத்து வாக்கெடுப்பையும் நடுநிலை வகித்து புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.