கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்த பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரை ஆகஸ்ட் 26ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி விடுத்தது. இந்த நிலையில், 5 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டுமென வழக்கறிஞர் பி.ரத்தினம் தலைமையில் 70க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டு தலைமை நீதிபதிக்கு கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். அதில், விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் ஜாமீன் வழங்கியது ஏற்கத்தக்கது அல்ல என்றும், விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் மாணவி தற்கொலை தான் செய்து கொண்டார் என்ற தனி நீதிபதி கருத்தும் ஏற்புடையதல்ல என்றும் தெரிவித்திருந்தனர். இதுக்குறித்து, சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் வழக்கறிஞர் ரத்தினம் இன்று முறையீடு செய்தார். தங்கள் மனுவை தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு நீதிபதிகள் எடுக்க வேண்டுமென்றும், பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். ஆனால் நீதிபதிகள், ஆயிரக்கணக்கான கோரிக்கை மனுக்கள் உள்ளதாக குறிப்பிட்டதுடன், அவற்றை வழக்காக விசாரிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். கனியாமூர் பள்ளி நிர்வாகிகள் ஜாமீன் ரத்து கோரிக்கையையும் தாமாக முன் வந்து வழக்காக விசாரிக்க மறுத்த நீதிபதிகள், கோரிக்கை மனுவை கவனத்தில் எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.