எழுத்தாளர் கல்கி, மாமன்னர் ராஜராஜ சோழனின் வரலாற்றை மையமாக கொண்டு எழுதிய வரலாற்று புனைவு நாவலான ‘பொன்னியின் செல்வனை’ இயக்குநர் மணிரத்தினம் திரைப்படமாக உருவாக்கி கடந்த வாரம் திரையரங்கில் வெளியிட்டிருந்தார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகத்தை லைக்கா நிறுவனத்தினர் தயாரித்துள்ள நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். முதல் தட்டு தொழில்நுட்ப கலைஞர்களுடன், நடிகர் விக்ரம், ஐஸ்வர்யாராய், ஜெயம் ரவி, கார்த்திக், திரிஷா, பிரபு, சரத்குமார், ஜெயராம், பிரகாஷ் ராஜ், ரகுமான், விக்ரம்பிரபு, அஷ்வின், மலையாள நடிகர் லால், பார்த்திபன் என நீண்டுகொண்டே போகும் நடிகர் பட்டாளமும் இணைந்து உருவாக்கி இருக்கும் இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பைப்பெற்று வருகிறது. இந்த நிலையில், திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி பேசி இருந்த வீடியோ குறித்து பொன்னியின் செல்வனில் அருள்மொழி வர்மனாக நடித்துள்ள ஜெயம் ரவி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் “ரஜினி உடனான ஒரு நிமிட உரையாடல் எனது சினிமா வாழ்க்கையில் புதிய அர்த்தத்தைகொடுத்துள்ளது. எனது நடிப்பை அவர் பாராட்டியதை என்னால் மறக்கவே முடியாது. உங்கள் அன்பு வார்த்தைகளுக்கு நன்றி தலைவா” என்று அவர் குறிப்பிட்டு தனது பதிவில் எழுதியுள்ளார்.