இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. இதில் ஏற்கனவே நடந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றிபெற்றிருந்த நிலையில், ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியுடன் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி பங்கேற்கும் 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று மாலை 7 மணிக்கு இந்தூரில் உள்ள ஹொல்கார் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இதில், 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த இந்திய அணி மூன்றாவது போட்டியிலும் வெல்வதன் மூலம் தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் விளையாடத்தொடங்கியது. அதன்படி, முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, களத்தில் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட ஆரம்பித்த இந்திய அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 178 ரன்கள் எடுத்தது. இதனால், 49 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி ஆறுதல் வெற்றிபெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.