பீகாரில் மகளிர் வளர்ச்சி கழக மேலாண் இயக்குனரான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஜோத் கவுர் என்பவரிடம் மாணவிகள் பேசிய உரையாடல் அடங்கிய வீடியோ வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், அதிகாரி கவுரை நோக்கி மாணவிகள் சிலர், எங்களுக்கு இலவச நாப்கின்களை அரசு வழங்க வேண்டும். இதனால், நாங்கள் பிறரை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இராது என கூறியுள்ளனர். அரசு நிறைய இலவசங்களை அளித்து வருகிறது. அதனால், ரூ.20 முதல் ரூ.30 விலையுள்ள நாப்கின்களை எங்களுக்கு அவர்கள் வழங்க முடியாதா? என்றும் கேட்டுள்ளனர்.
இதற்கு அதிகாரி ஹர்ஜோத் கவுர், இந்த கோரிக்கைகளுக்கு ஏதேனும் முடிவு உண்டா? நாளைக்கு நீங்கள், அரசு ஜீன்ஸ் துணிகளை வழங்கலாம். அழகிய காலணிகளை வழங்கலாம் என கூறுவீர்கள். முடிவில், குடும்ப கட்டுப்பாடு என்று வரும்போது, உங்களுக்கு இலவச காண்டம்கள் கூட வேண்டும் என கூறுவீர்கள் என பேசிய காட்சிகள் வெளிவந்துள்ளன.
ஏன் அரசிடம் இருந்து பொருட்களை எடுத்து கொள்ள வேண்டிய அவசியம் உங்களுக்கு உள்ளது? என கேட்டுள்ள கவுர், இந்த எண்ணம் தவறானது என்றும் பேசியுள்ளார். இதற்கு மாணவிகள், தேர்தலின்போது வாக்குகளை பெற அரசு எண்ணற்ற வாக்குறுதிகளை அளித்து வருகின்றன என பதிலடியாக கூறியுள்ளனர். அதற்கு கவுர், நீங்கள் வாக்களிக்காதீர்கள். (பாகிஸ்தானை போல) என குறிப்பிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.