பெரும்பாலும் வரலாற்றை பற்றியோ அல்லது தலைவர்களை பற்றியோ ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டால்,அந்தத் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் உறுதியாக இருந்தே தீரும் என்பது உண்மை.ஆனால் தற்போது “தலைவி”படத்தை இயக்கிய விஜய் அதை உடைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.விஜய் இயக்கத்தில் தலைவி திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில்,அது குறித்த விமர்சனம் இன்று ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியாகியுள்ளது.அதில் தலைவிப் படத்தை இயக்குநர் விஜய் மிக அழகாக செதுக்கி இருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் “தலைவி “இந்தப் படம் இந்தி,தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.எம்.ஜி.ஆராக அரவிந்தசாமியும்,ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத்தும் நடித்துள்ளனர்.ஜெயலலிதாவின் பள்ளிப்பருவம் தொடங்கி ஆட்சியில் அமரும் வரை இந்த திரைப்படம் பேசுகிறது.ஜெயலலிதாவின் தந்தை இறந்துவிட நிதி நெருக்கடியால் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு திரைத்துறைக்குள் அவருடைய பிரவேசம் எப்படி இருந்தது,எம்.ஜி ஆருடன் ஏற்பட்ட நட்பு,அவருக்காக ஜெயலலிதா செய்த தியாகம்,எம்.ஜி.ஆர் காட்டிய அரசியல் வழி என அனைத்தையும் இந்தத் திரைப்படம் மிக அழகாக விவரிப்பதாக விமர்சனம் வெளியாகியுள்ளது.மேலும் எம். ஜி.ஆராக அரவிந்த சாமியும், ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத்தும் மிக இயல்பாக இருவரையும் திரையில் நிறுத்துவதாக சொல்லப்படுகிறது.அதோடு ஆர்.எம்.வீரப்பனாக சமுத்திரகனியும்,கருணாநிதியாக நாசரும் நடித்திருப்பது படத்திற்கு மேலும் வலு சேர்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதாவின் இளமை காலத்தையும், ஆட்சிக்கு வந்த பிறகு உள்ள தோற்றத்தையும் கங்கனா ரனாவத் மிக சிறப்பாக காட்டியிருப்பதாக அவருக்குசமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகின்றன.மேலும் ஜெயலலிதா சட்டப்பேரவையில் பட்ட அவமானங்களையும்,அந்த நேரத்தில் ஆட்சிக்கு வருவேன் சூளுரைத்த சபதங்களை பேசும் விதமும் திரையை அதிர வைப்பதாக விமர்சனங்கள் வெளியாகி உள்ளன.சர்ச்சை ஏற்படாத வகையில் மிக அமைதியாக விஜய் படைத்திருப்பதால் இந்தப் படத்திற்கு அ.தி.மு.கவினர் மத்தியில் வரவேற்பு இருக்கும் என்று சமூக வலைதளவாசிகள் கூறிவருகின்றனர்.அந்த வகையில் அ.தி.முகவினர் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்தத் திரைப்படம் குறித்து அந்தக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்..
“தமிழக மக்கள் மட்டுமல்ல,சர்வதேச அளவில் உள்ள தமிழ் மக்களின் மனங்களில் வாழக்கூடியவர் புரட்சி தலைவி.அவர் மறைந்தாலும் இன்றும் வாழுகின்ற தெய்வமாகத்தான் அ.தி.மு.க தொண்டர்களும் உலக முழுவதிலும் உள்ள மக்களும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அவருடைய ஆட்சிக் காலத்தில் தான் பெண்களுக்கு அதிகமான திட்டங்களையும்,சலுகைகளையும் கொண்டு வந்து நடைமுறைப்படுத்தினார்.அந்த வகையில் முதன் முதலாக பெண் கமாண்டோ படை மற்றும் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு,மகளிர் காவல் நிலையம்,மகளிர் நீதி மன்றம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து அனைத்து மக்களின் நெஞ்சங்களில் நீங்காஇடம் பிடித்தவர்.இப்படியான பெருமைக்குரிய தலைவியைப் பற்றிய சுயசரிதை திரைப்படம் வெளியாக உள்ளது.இந்த திரைப்படம் அ.தி.மு.கவினர் தொண்டர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ளது.அதனால் இத்திரைப்படம் புரட்சி தலைவியின் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.ஒருவேளை வியாபார நோக்கத்தோடு அம்மாவின் புகழை கொச்சைப் படுத்துவகையிலும், அவருடைய பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையிலும் இருந்தால்,அந்தத் திரைப்படத்திற்கு நிச்சயம் எதிர்ப்பு தெரிவிப்போம் “அந்த திரைப்படத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம்”என்றார்.