கொரோனா தொற்றுக்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளில் திரையரங்கில் வெளியாகி இருக்கும் நடிகர் தனுஷின் முதல் திரைப்படம் திருச்சிற்றம்பலம். இதற்கு முன்னதாக, ஜகமே தந்திரம் மற்றும் மாறன் திரைப்படங்கள் ஓடிடி-யில் வெளியான நிலையில், திரையரங்குகளில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்துக்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், மித்ரன் ஜவகர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் தனுஷ், ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே, திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. எப்போதும், பக்கத்து வீட்டு பையன் போல இருப்பது தனக்கு ப்ளஸ் என்று சொல்லும் நடிகர் தனுஷ் இந்த திரைப்படத்தில் உணவு டெலிவிரி செய்யும் நபராக காதல், நகைச்சுவை கலந்து நடித்துள்ளார். ஒரு கலைஞருக்கு ரசிகர்களின் எண்ணத்தை நேரடியாக தெரிந்துக்கொள்ள ஆவல் அதிகமாக இருக்கும். அதன்படி, கர்ணன் திரைப்படத்துக்குப் பிறகு சுமார் 1.5 ஆண்டுகளுக்கு பின் திரையரங்கில் வெளியாகும் நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம் திரைப்படத்துக்கு ரசிகர்கள் எப்படி ரெஸ்பான்ஸ் செய்யப்போகிறார்கள் என்று பார்க்க படக்குழு ஆவலுடன் காத்திருந்தது. அவர்களின் காத்திருப்பு வீண் போகதபடி, திருச்சிற்றம்பலம் இளசுகளிடையே கமர்சியல் வெற்றிப்படமாக ஓடியது. எனினும், நடிகர் தனுஷிடம் இருந்து கமர்சியல் சாரா படங்களை எதிர்ப்பார்ப்பவர்களுக்கு இந்த படம் தீணிபோடவில்லை என்பது அவர்களுக்கு ஏமற்றமே. எது எப்படியோ வணிக ரீதியாகவும் சரி, புகழ் ரீதியாகவும் சரி, திருச்சிற்றம்பலம் தனுஷ்க்கு மற்றொமொரு பலம். இந்தநிலையில், திருச்சிற்றம்பலம் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது.