ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று ஆப்கானிஸ்தானுடன் மோதியது. இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் செயல்பட்டார். தொடக்க வீரர்களாக விராட் கோலி, கே.எல்.ராகுல் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டி பந்துகளை சிக்சர், பவுண்டரிக்கு விரட்டினர். இருவரும் அரைசதம் கடந்து, தொடக்க விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்தனர். கே.எல்.ராகுல் 41 பந்துகளில் 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர், சூர்யகுமார் 6 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அடுத்து ரிஷப் பண்ட் களமிறங்கினார். எதிர்புறம் விராட் கோலி பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு விரட்டி சதம் அடித்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. விராட் கோலி 61 பந்துகளில் 122 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
பின்னர் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான ஹஸ்ரத்துல்லா மற்றும் முகமதுல்லா இவரும் ரன் எதுவும் எடுக்காமல் அடுத்தடுத்து அவுட்டாகினர். அடுத்து களமிறங்கிய இப்ராகிம் சட்ரன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், இந்திய வீரர் புவனேஸ்வர் குமாரின் சிறப்பான பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகினர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் 8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 101 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.