ராஜராஜ சோழனின் வரலாற்றை மையமாக கொண்ட வரலாற்று புனைவு நாவல் பொன்னியின் செல்வன். எழுத்தாளர் கல்கியின் இந்த நாவலை தற்போது இயக்குநர் மணிரத்தினம் திரைப்படமாக உருவாக்கியுள்ளார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், முதல் தட்டு தொழில்நுட்ப கலைஞர்களுடன், நடிகர் விக்ரம், ஐஸ்வர்யாராய், ஜெயம் ரவி, கார்த்திக், திரிஷா, பிரபு, சரத்குமார், ஜெயராம், பிரகாஷ் ராஜ், ரகுமான், விக்ரம்பிரபு, அஷ்வின், மலையாள நடிகர் லால், பார்த்திபன் என நீண்டுகொண்டே போகும் நடிகர் பட்டாளமும் இணைந்து உருவாக்கி இருக்கும் இந்த திரைப்படத்தின் முதல் பாக ஆடியோ மற்றும் ட்ரெய்லர் இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகத் தலைமை தாங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் பாடல்களைத் தனது இசைக்குழுவுடன் நேரலையில் நிகழ்த்தவுள்ளார். பின்னர், பொன்னியின் செல்வன் பாகம்-1 ட்ரெய்லர் கமல்ஹாசன் குரலில் வெளியாகவுள்ளது.