பிப்ரவரி 24, புரட்சித் தலைவி என்றும் அம்மா என்றும் அழைக்கப்பட்ட மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் செல்வி . ஜெயலலிதா அவதரித்த நாள். இந்த நாள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் என்று சொன்னால் அது மிகையாகாது .
செல்வி.ஜெயலலிதா பிறந்தது மைசூர் நகர் என்றாலும் அவரது பூர்விகம் தமிழகத்தில் உள்ள ஸ்ரீரங்கம் தான்.ஒரு பெண்ணாக, அரசியல்வாதியாக, தமிழகத்தின் முதல்வராக அவர் சந்தித்த போராட்டங்கள், சாதனைகள் என அனைத்தும் இன்றைய பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது.1 1/2 வயது குழந்தையாக இருந்தபோதே தகப்பனை இழந்து, தாயின் அரவணைப்பில் வாழவேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. குடும்பத்தை காக்க வேண்டிய முழு பொறுப்பும் தாய் சந்தியாவிற்கு. நடிப்பை தொழிலாக கொண்டதால் அவர் பல நாட்கள் குழந்தைகளை பிரிந்தே இருந்தார்.
இதன் காரணமாக குழந்தை ஜெயலலிதா தாய், தகப்பன் என இருவரையும் பிரிந்து பாட்டியிடம் வளர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்படிப்பட்ட சூழலிலும் படிப்பில் முதல் மாணவியாகத் திகழ்ந்தார்.1964ம் ஆண்டு மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். மேல்படிப்பிற்க்கு ஜெயலலிதா முயற்சி செய்த போது குடும்ப சூழல் காரணமாக நடிப்பு தொழிலில் அடி எடுத்து வைக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
1965ல் அவர் நடித்த முதல் படம் “ வெண்ணீற ஆடை “ வெளிவந்தது. முதல் படத்திலேயே கதாநாயகியாகி புகழின் உச்சத்தை அடைந்தார். தமிழ், தெலுங்கு,மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்தார், கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் நடிப்புத்துறையில் முன்னணி நட்சத்திரமாக சாதனை படைத்தார் . “நதியை தேடி வந்த கடல்” என்ற திரைப்படம் அவரது கடைசி திரைப்படம் ஆகும்.
சினிமா துறையை விட்டு விலகியபின் 1982 ல் தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார் . அதே ஆண்டு எம் .ஜி.ஆர் அவர்கள் அ.தி.மு.க வின் கொள்கை பரப்பு செயலாளராக அவரை நியமித்தார்.
1984 ம் ஆண்டு ராஜ சபா உறுப்பினராகவும், நாடாளுமன்ற அ.தி.மு.க துணைத் தலைவராகவும் தில்லியில் பணியாற்றினார். ராஜய சபையில் செல்வி ஜெயலலிதா பேசிய பேச்சுகள் அவருக்கு பெரும் பாராட்டையும், புகழையும் கொடுத்தது. அவரது ஆங்கிலப்புலமையும் , எளிதில் அனைவரிடம் உரையாடும் பாங்கும், பல மொழித்திறனும் அனைவரையும் கவர்ந்தது. புரட்சி தலைவர் எம் .ஜி.ஆர் 24.12.1987 அன்று மறைந்தார். அதன்பிறகு செல்வி . ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை. திரு.எம்.ஜி.ஆர் இறுதி ஊர்வலம் தொடங்குவதற்கு முன் எம் .ஜி.ஆர் உடல் இருந்த பீரங்கி வண்டியில் செல்வி ஜெயலலிதா ஏற முயற்சித்தபோது அவர் தாக்கப்பட்டார் . மேலும் தான் தள்ளப்பட்டதையும், கடுமையான வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தப்பட்டதையும் பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் .
அது மட்டுமல்லாமல் முதலமைச்சராக திரு. கருணாநிதி இருந்த போது 25.3.1989 அன்று சட்ட சபையில் நடந்த அமளியின்போதுசட்ட சபையில் செல்வி.ஜெயலலிதா தாக்கப்பட்டார் . அன்றையதினம் சட்டசபையை விட்டு வெளியே வந்த அவர் இனி சபைக்கு போகப்போவதில்லை என்றும் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பே மீண்டும் வருவேன் என சூளுரைத்துச் சென்றார். அவர் சொன்னவாரே 1991 ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று முதலமைச்சராக அரியணை ஏறினார்.
தொட்டில் குழந்தை திட்டம் முதல் அம்மா உணவகம் வரை பல்வேறு நலத்திட்டங்களை பெண்களுக்காகவும், நலிந்தோருக்காகவும் அவர் கொண்டு வந்தார்.
ஆட்சியின்போதும், எதிர்க்கட்சியாக செயல்பட்டபோதும் அவர் சந்தித்த நெருக்கடிகள் சர்ச்சைகள் ஏராளம். அவர் 2016 டிசம்பர் 5ம் தேதி இம்மண்ணைவிட்டு மறந்தாலும், அவரது பெயரும் புகழும் மறையாமல் பெண்ணினத்திற்கு முன்னுதாரணமாய், வரலாற்று தலைவியாய் அனைவர் நெஞ்சிலும் குடியிருக்கிறார் என்பதே நிதர்சனமான உண்மை.
– பெண்களின் குரல் “ஜெமிலா”