இந்தியாவில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986ஆம் ஆண்டு பாராளுமன்றத்தால் இயற்றப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் தனிநபர் நுகர்வோருக்கு அனைத்துப் பாதுகாப்பும் தரப்படவேண்டும் . எந்தத் தனிநபரும், குறையுள்ள பொருளையோ தரமற்ற சேவையையோ பெற்றால் அவருக்கு உதவவே இந்தச் சட்டம் இயற்றப்பட்டது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி, பேருந்துகளில் பயணம் செய்யும்போது பயணிக்கு ஏதேனும் சேவைக்குறைபாடு இருந்தால் நீங்கள் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு உங்கள் குறைகளை எளிதாக எடுத்துக் கூறலாம்.
இதற்காக ஒருவர் எந்த வழக்கறிஞரையும் நாடவேண்டிய அவசியமில்லை. அவரே தன் புகாரை நுகர்வோர் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லலாம். மிக எளிமையாக, தெளிவாக புகாரைத் தெரிவிப்பது டன், தன் புகாரை நிரூபிக்கும் வகையில் முக்கிய ஆவணங் களையும் அவற்றின் நகல்களை யும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இத்தகைய வசதி வேறு எந்த சிவில் நீதிமன்றத்திலும் கிடையாது. அவ்வகையில் மாவட்ட, மாநில, தேசிய நுகர்வோர் நீதிமன்றங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவையாகும்.
தமிழ்நாடு போக்குவரத்துத் துறையினரால் வெளியிடப்பட்டுள்ள மக்கள் சாசனத்தில் பயணிகளின் கடமைகள், ஓட்டுநர், நடத்துநர்களின் கடமைகள் மற்றும் நுகர்வோரின் உரிமைகள் ஆகியவை பற்றி விரிவாக வரையறைத்துக் கூறப்பட்டுள்ளன.
பயணிகளின் கடமைகள்
முதலில் , பயணச்சீட்டைப் பணம் கொடுத்து வாங்க வேண்டும். அது நெடுந்தொலைவுப் பயணமாக இருந்தால், பயணச் சீட்டின் நகலை எடுத்து வைத்துக்கொள்ளவது நல்லது. கடைசி நேரத்தில் பயணச் சீட்டு தொலைந்தாலும் அல்லது பயணப்படி திரும்பப் பெறுவதற்கும் அது உதவும். பரிசோதகர் வரும்போது மறக்காமல் பயணச் சீட்டைக் காட்ட வேண்டும். பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்வது தவறு மட்டுமல்ல, ஆபத்தானதும்கூட. நடத்துனர் பயணச் சீட்டு கொடுக்க மறுத்தால் அதனை அவரது மேலதிகாரிகளுக்குத் தெரிவித்து அவர்மீது புகார் கொடுப்பது பயணியின் உரிமை.
உங்களது உைடமைகளை முன்னதாகவே பதிவு செய்ய வேண்டும். உங்களது பெயர், விலாசம், தொலைபேசி எண் மற்றும் ஏதேனும் அடையாள அட்டை இருந்தால் அதனையும் நகல் எடுத்து உங்கள் கைப்பையில் வைத்துக்கொள்வது அவசியம். பயணம் செய்யும்போது குடித்தல், புகை பிடித்தல், உணவு உண்ணுதல் போன்றவற்றை மற்ற பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் உங்கள் பயணம் இனிதாக இருக்கவும் அறவே தவிர்க்க வேண்டும். சிலிண்டர்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கண்டிப்பாக எடுத்துச் செல்லக் கூடாது.
பேருந்தில் பயணம் செய்யும்பொழுது அனாவசியமாக உங்கள் சொந்த நலனுக்காக போகும் வழியில் நிறுத்தச் சொல்லக் கூடாது. இதனால், நேரம் வீணாவதோடு மற்ற பயணிகளின் அதிருப்திக்கும் வழிவகுக்கும். பேருந்து ஓடிக்கொண்டிருக்கும்போது, கீழே இறங்கவோ ஓடிப்போய் ஏறவோ முயற்சி செய்யக்கூடாது. பேருந்தின் முன் பக்கத்தில் இன்ஜின் அருகே அமர முற்படாதீர்கள். ஓட்டுநர் பேருந்தை ஓட்டும்பொழுது அவரிடம் அரட்டை அடிக்காதீர். அது அவரது கவனத்தைச் சிதறடிப்பதோடு பேருந்து விபத்துகளுக்கு வழிவகுக்கும். பேருந்தின் கூரையின்மீது பயணம் செய்யாதீர்கள். ஓட்டுநர் பிரேக் போடும்பொழுது நீங்கள் கீழே விழுந்து அடிபட வாய்ப்புண்டு. பேருந்தில் ஏதேனும் இயந்திரக் கோளாறு ஏற்படுமானால் ஓட்டுநர், நடத்துநர் இருவருக்கும் உதவ முற்படுங்கள். உரிய இடத்தில் அமர்ந்தாலும், கண்ட இடத்தில் எச்சில் துப்பாது இருந்தாலும் உங்கள் பயணம் பாதுகாப்பாகவும் சௌகர்யமாகவும் இருக்கும்.
சேவையாளர்கள் கவனத்துக்கு…
மாநகரப் பேருந்துகள் வாங்கும்போது, தரமான பேருந்துகளையே நல்ல பேருந்து உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்க வேண்டும். எரிபொருளின் திறனைப் பார்த்து வாங்க வேண்டும். தற்போதைய பெரும்பாலான ஊர்திகளில், பயணிகள் ஏறும் படிக்கட்டுகள் மிக உயரத்தில் அமைந்துள்ளன. இதனால், பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். சிறுவர் சிறுமியரும் கஷ்டப்பட்டுத்தான் ஏறுகிறார்கள். இதனால், புதிய பேருந்துகளை வாங்கும்போது பயணிகள் ஏறும் படிக்கட்டு சற்றே தாழ வைக்க வேண்டும். இதனால், பேருந்தில் வேகமாகப் பயணிகள் ஏறவும் இறக்கவும் முடியும். பேருந்துகளைத் தினமும் சுத்தம் செய்து நீண்ட பயணத்திற்கு அது தயாராக உள்ளதா என்று தினமும் போர்க்கால அடிப்படையில் பராமரிப்பு செய்யப்பட வேண்டும். ஏனென்றால், நம் நாட்டில் 90 சதவீத மக்கள் மாநகரப் பேருந்துகளையே நம்பி இருக்கிறார்கள். பேருந்துகளின் பாகங்கள் பழுதடையும்போது அவை உடனுக்குடன் மாற்றப்பட வேண்டும். இதனால், எரிபொருளும் நேரமும் மிச்சமாகின்றன. பேருந்துகளின் ஆயுட்காலம் முடிவடைந்தவுடன் அதனை மாற்றி புதுப் பேருந்துகள் வாங்கவேண்டும். சாலைகளை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். இதற்குப் போக்குவரத்துக் கழகம் மாநகராட்சியுடன் அவ்வப்போது தொடர்புகொண்டு சாலைகளில் பேருந்து மற்றும் லாரிகளினால் ஏற்பட்டுள்ள குண்டு குழிகளை உடனுக்குடன் சீர்செய்யப் பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு செய்வதனால் பேருந்தின் சக்கரங்கள், டயர்கள் தேயாமல் நீண்டநாள் உழைக்கும்.
நடத்துநர், ஓட்டுநரின் கடமைகள்
பேருந்து ஓட்டுநருக்குக் கடுமையான சிறந்த பயிற்சி அளிக்க வேண்டும். அவருக்குப் போக்குவரத்துச் சட்டங்களைச் சொல்லிக்கொடுத்தால் மட்டும் போதாது. அதை மீறும்போது கிடைக்கும் தண்டனை களைப் பற்றி யும் விரிவாக எடுத்துச் சொல்லப்பட வேண்டும். குறிப் பாகப் பயணிகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி அவர் களுக்குக் கடுமையான பயிற்சி அளிக்கப்பட வேண்டும். நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் அவர்மீது எவ்வாறு பாயும் என்பதைத் தெளிவாக்க வேண்டும்.
நடத்துநருக்குப் பொறுப்புகள் அதிகம். அவர் பயணச் சீட்டு கொடுப்பதோடு அல்லாமல் பயணிகளின் பாதுகாப்பிற்கும் பொறுப்பாகிறார். பயணியைக் குறிப்பிட்ட இடத்திற்கு குறிப்பிட்ட காலத்திற்குள் அவர் உயிரையும் உைடமையையும் பத்திரமாகக் கொண்டு சேர்ப்பதுதான் பயணச் சீட்டின் பொருள். நடத்துநர் பயணிகளின் படிக்கட்டுப் பயணத்தை அறவே நிறுத்த வேண்டும். குறிப்பாகப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் எதையும் பொருட்படுத்தாமல் படிக்கட்டுகளில் பயணம் செய்யும்போது அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன. நடத்துநர் கண்டிப்பாகப் பேருந்து நிறுத்தங்களில் மட்டுமே முன்னதாக விசில் ஊதிப் பேருந்தை நிறுத்தச்செய்ய வேண்டும். இதற்கு ஓட்டுநர் ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாதது.
ஓட்டுநர், நடத்துநர் இருவருமே பயணிகளிடம் அன்பாக நடந்துகொள்ள வேண்டும். அவர்கள் நடத்தை, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் முக்கிய இடம் பெறுகிறது. அவர்களுடைய சேவை குறைபாட்டினால் பயணிகள் அவர்கள்மீது நுகர்வோர் நீதிமன்றங்களில் புகார் கொடுத்துத் தங்கள் குறைகளைத் தீர்த்துக்கொள்ளலாம். இதனை மிகத் தெளிவாக ஓட்டுநர் நடத்துநர் களுக்கு மேலதிகாரிகள் சொல்ல வேண்டும். இப்படிச் செய்தால்தான் பயணிகள், ஓட்டுநர், நடத்துநர் உறவு சுமுகமாக இருப்பதோடு பாதுகாப்பாகவும் இருக்கும்.
நீண்ட நேரப் பயணப் பேருந்துகளில் நடத்துநரிடம் பயணிகளின் முழு விவரமும் அடங்கிய அட்டை இருக்க வேண்டும். இது இக்கட்டான சமயங்களில் உதவியாக இருக்கும். நுகர்வோர் போக்குவரத்துச் சேவையில் குறிப்பிடப்பட்டவை அனைத்தையும் உரிமையுடன் கேட்டுப் பெறலாம்.
நுகர்வோர் உரிமைகள்
ஓட்டுநர், நடத்துநர் இருவரும் பயணிகளிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். பயணச் சீட்டின் சில்லறையைத் தவறாமல் கொடுக்க வேண்டும். பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்துமாறு கேட்க பயணிகளுக்கு உரிமை உண்டு