அரசுத் துறைகளின் சாா்பில் இயக்கப்படும் பெட்ரோல் நிரப்பு நிலையங்கள், எரிபொருள்களை கொள்முதல் செய்யும்போது சிக்கன நடவடிக்கையைக் கையாள வேண்டுமென வேண்டுகோள் விடுத்து, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் என்.முருகானந்தம் கடிதம் வெளியிட்டுள்ளாா். அதில், ”அரசின் சில துறைத்தலைமைகளே பெட்ரோல் நிரப்பு நிலையங்களை நடத்தி வருகின்றன. சென்னை மற்றும் மாநிலத்தின் பிரதான பகுதிகளில் நடத்தப்பட்டு வரும் இந்த நிரப்பு நிலையங்களின் வழியே அரசு வாகனங்களது எரிபொருள் தேவையும் பூா்த்தி செய்யப்படுகிறது. இந்த நிரப்பு நிலையங்களுக்கு எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து மொத்த கொள்முதல் விலைக்கோ அல்லது சில்லறை விலையிலோ எரிபொருள்கள் வாங்கப்படுகின்றன. பெட்ரோல், டீசல் வாங்குவதற்கென தனித்த வழிகாட்டு நெறிமுறைகள் ஏதுமில்லை. பெட்ரோல் மற்றும் டீசலுக்கான மொத்த கொள்முதல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயா்த்தியுள்ளன. ஆனால், சில்லறை விலையில் மாற்றம் ஏதுமில்லை. எனவே, அரசுப் போக்குவரத்துத்துறை போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் சில்லறை விலையில் உள்ள பெட்ரோல் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருள்களின் தேவையை பூா்த்தி செய்து கொள்கின்றன. அரசுத்துறை நிறுவனங்களும் தங்களின் தேவைக்கான பெட்ரோல், டீசல் எங்கு குறைவான விலையில் கிடைக்குமோ அங்கு கொள்முதல் செய்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகின்றன என தனது உத்தரவில் முருகானந்தம் தெரிவித்துள்ளாா்.