சென்னை, மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி கிராமத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக தளத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் ஜூலை 27ஆம் தேதி தொடங்கி வரும் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு பொது பிரிவில் 189 அணிகளும் பெண்கள் பிரிவில் 154 அணிகளும் என மொத்தமாக 187 நாடுகளில் இருந்து பதிவு செய்தனர். ஏறக்குறைய 1500-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு, செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை ஒருங்கிணைந்து நடத்துவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டு சிறப்பாக போட்டிகள் நடைபெற்று வருகிறது. போட்டிகள் நடைபெறும் இடத்தில், தினமும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, வீரர்கள் உற்சாகப்படுத்தப்பட்டு வருகின்றனர். அவர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குரிய உணவுகளும் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ஆகஸ்ட் 9ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான நிறைவு விழா நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக, பிரதமர் மோடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோலாகலமாக தொடங்கி வைத்த ஒலிம்பியாட் போட்டி உலகளவில் பேசப்பட்ட நிலையில், நிறைவு விழாவும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா நிகழ்வுகளை வெளியிட காட்சி ஊடகம் மற்றும் ஓடிடி நிறுவனங்களுக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. அதில், தேர்வு செய்யப்படும் தளத்துக்கு ஒளிபரப்புக்கான ஒராண்டு உரிமமும் வழங்கப்படவுள்ளது. இதுத்தொடர்பான முழு விவரங்களை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையத்தளத்தில் தெரிந்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.