இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு போராட்டங்களை தினம்தோறும் நிகழ்த்தி வருகின்றனர். இதனால், அந்த நாட்டின் அரசியலில் தினமும் ஒரு மாற்றம் நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில், அதிபா் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்ச கடந்த வாரம் ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டின் இடைக்கால அதிபராக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றாா். இதனைத் தொடர்ந்து புதிய அதிபருக்கான தேர்தலில், இடைக்கால அதிபரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க 134 வாக்குகள் பெற்றார். இதையடுத்து, 6 முறை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க முதல் முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டு நேற்று (ஜூலை மாதம் 21ஆம் தேதி) பதவியேற்றுக்கொண்டார். இதன் தொடர்ச்சியாக, இலங்கை பொதுஜன பெரமுன கட்சியைச் சோ்ந்த தினேஷ் குணவா்தன (73) இலங்கையின் பிரதமராக இன்று பதவியேற்றுக்கொண்டார். அதிபர் ரணில் விக்ரமசிங்க அவருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.