சென்னையில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் துறை ரீதியான ஆய்வை மேற்கொண்ட அமைச்சர் செந்தில்பாலாஜி பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில், தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவித்தார். அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 2.37 கோடி வீடு மற்றும் குடிசைமின் நுகர்வோரில், ஒரு கோடி நுகர்வோர்களுக்கு (42.19 சதவீதம்) மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை. அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். மற்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும். வீட்டு மின்நுகர்வோர்களுக்கு தேர்தல் வாக்குறுதி எண்.222-ன் படி நிலைக்கட்டணம் இருமாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் 2.37 கோடி வீட்டு மின்நுகர்வோர்கள் பயன் அடைவர். தற்பொழுது குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிப்பாட்டு தலங்கள் முதலிய மின் கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.
மின்கட்டன உயர்வு விவரம்
இரு மாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63.35 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (26.73 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.27.50, இரு மாதங்களுக்கு மொத்தம் 300 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 36.25 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (15.30 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (7.94 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 10.36 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (4.46 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.297.50 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு மொத்தம் 600 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 3.14 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (1.32 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.155, இரு மாதங்களுக்கு மொத்தம் 700 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 1.96 லட்சம் வீட்டுமின் நுகர்வோர்களுக்கு (0.83 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.275 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு மொத்தம் 800 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 1.26 இலட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (0.53 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.395 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு மொத்தம் 900 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 0.84 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (0.35 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.565 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.