நாடு முழுவதும் 18 முதல் 59 வயது வரையிலான அனைவருக்கும் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இன்று முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை 75 நாட்களுக்கு இலவசமாக வழங்க மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு ஒன்பது மாதங்கள் நிறைவு பெற்றவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், முன்களப் பணியாளர்கள் மருத்துவ பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவமனை மற்றும் அரசு சார்ந்த தடுப்பூசி மையங்களில் இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில் 18-ல் இருந்து 59 வயதுடைய அனைவருக்கும் இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு பாதுகாப்பாக இருக்க இந்த இலவச கொரோனா தடுப்பூசி டோஸ் செலுத்தும் சிறப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.