கடந்த ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து-இந்தியா இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காம் மைதானத்தில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் எடுத்தது. ரிஷப் பண்ட் 146 ரன்னும், ரவிந்திர ஜடேஜா 104 ரன்னும் எடுத்தனர். தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் பேரிஸ்டோவ் அதிகபட்சமாக 106 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து வெற்றிபெற இந்திய அணி 378 ரன்கள் நிர்ணயித்தது. இதனை தொடர்ந்து 378 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 109 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், அடுத்துவந்த ஜோ ரூட் மற்றும் ஜானி பிரிஸ்டோவ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தனர். ஜோ ரூட் 142 ரன்னும், பேர்ஸ்டோவ் 114 ரன்னும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 378 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.