திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த சௌளூர் கிராமத்தில் சிறிய தரைப்பாலம் உள்ளது. இந்த பாலத்தை சுமார் பத்திற்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை, ஏலகிரி மலை, ஜலகாம்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால், ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அவை திருப்பத்தூரில் உள்ள பல ஏரிகளை கடந்து ஊத்தங்கரை பாம்பாறுக்கு சென்றடைகிறது. இந்த தண்ணீர் இடையில் சௌளூர் தரை பாலத்தை கடந்துபோகும். இந்த நிலையில், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தரைப்பாலம் அடித்துச் சென்றது. இதனையடுத்து அடித்து செல்லப்பட்ட தரைப்பாலத்தை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா உத்தரவின் பேரில் தற்காலிக இரும்பு தரைப்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால், நேற்று ஊராட்சி நிர்வாகம் தற்காலிக தரைப்பாலத்தை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சுமார் பத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்ப முடியாமல் ஆற்றை கடக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதையடுத்து, உடனடியாக தரைப்பாலம் அமைத்து தர அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.