தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் மே 4ஆம் தேதி தொடங்கியது. ஆனால் அதற்கு முன்னதாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் வெலுத்துவாங்கி வந்தது. எனினும் அக்னி தொடங்கி சில நாட்களிலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்யத்தொடங்கி இதமான சூழல் நிலவியது. இதனால் மக்களும் எப்போதும் போல் அக்னி வெயிலில் வதையாமல் ஓரளவுக்கு இதமாக இருந்தது. அதேபோல், அசானி புயல் காரணமாகவும் அக்னியில் ஓரளவுக்கு மழை பெய்தது. இந்தநிலையில் அக்னி வெயில் நாளையுடன் முடிந்தாலும், வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகமாகவே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, நேற்று அதிகபட்சமாக கரூர் மாவட்டம் பரமத்தி பகுதியில் 104.60 டிகிரி வெயிலும், கடலூரில் 104.18 டிகிரி வெயிலும், சென்னை மீனம்பாக்கம் பகுதியில் 102.38 டிகிரி வெயிலும், திருச்சியில் 101.48 டிகிரி வெயிலும், சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் புதுச்சேரியில் 100.94 டிகிரி வெயிலும் பதிவாகி உள்ளது.