தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை அரசே நியமிப்பது தொடர்பாக சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்திருந்தார். பின்னர், பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வழிவகுக்கும் சட்ட மசோதா மீது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அதனையடுத்து, தமிழ்நாட்டின் உள்ள பல்கலைக்கழங்களின் துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்கும் மசோதா காரசார விவாதங்களுக்குப் பின் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் சில மாநிலங்களில் இருப்பது போல துணைவேந்தரை மாநில அரசே நியமிக்கும் மசோதா தமிழகத்திலும் நிறைவேறி உள்ளது. முன்பு இருந்த நடைமுறைப்படி ஆளுநர் நியமிக்கும் துணை வேந்தர் தேடுதல்குழு பல்கலைக்கழக துணைவேந்தருக்கான 3 நபர்களை ஆளுநருக்கு பரிந்துரை செய்யும். அந்த பரிந்துரையின் அடிப்படைடியில் 3 பேரில் ஒருவரை ஆளுநர் துணை வேந்தராக அறிவிப்பார்.