‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில் உருவாகி உள்ள புத்தகத்தின் முன்னுறையில் இசையமைப்பாளர் இளையராஜா, “பிரதமர் மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு எழுதியுள்ளார். இளையராஜாவின் இந்த கருத்தின் மீது பல மாறுபட்ட விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இந்தநிலையில், நேற்று பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி நட்டா, இளையராஜாவுக்கு ஆதரவாகவும், எதிர்கட்சிகளை கண்டித்தும் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதனையடுத்து, கரூர் நாடாளுமன்ற உறுப்பினரான காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், இன்று இளையராஜாவிற்காக கருத்துரிமைக் காவலர் வேடம் பூண்டுள்ள பாஜக, ஏன் மக்கள் விரோத மோடி அரசுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைப்பவர்களின் கருத்துரிமைக்கு எதிராக அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து தனது கருத்தை பதிவிட்டுள்ள அவர், கருத்தை கூறுவது ஒருவரின் உரிமை. அந்தகருத்து சமூகத்திற்கு எதிராக இருக்குமென்றால் அதற்கான கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். கருத்துரிமையும், விமர்சிக்கும் உரிமையும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். ஆனால் தமிழ் மண் எச்சரிக்கையும், விழிப்புணர்வும் மிகுந்தது. அன்பை, அமைதியை, ஒற்றுமையை, வளர்ச்சியை விரும்புவது. இதற்கு எதிரான ஆர்எஸ்எஸ்/பாஜக பாசிச சித்தாந்தை யார் கையில் எடுத்தாலும் அவர்களை, இரக்கமற்று தோலுரித்து தொங்கவிடும் வழக்கமுடையது. இளையராஜாவுக்கும் அதுதான் நேர்ந்துள்ளது. மேலும் அவர், இளையராஜாவின் இசை தமிழ் மண்ணின் ஆத்மார்த்தமான அடையாளங்களில் ஒன்று. அதற்காக அவரை நாம் என்றென்றும் நேசிப்போம். ஆனால் அம்பேத்கருக்கு இணையாக மோடியை உயர்த்தி அவர் பேசுவதை வெறும் அரசியல் புரிதலற்ற நிலைப்பாடு என்று கடந்து போய்விட முடியாது என்று கூறிப்பிட்டுள்ளார்.