மேகாலயாவில் இன்று தொடங்கும் 83ஆவது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன், சக வீரர்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து காரில் புறப்பட்டார். ஷில்லாங் நோக்கி சென்றுகொண்டிருந்த பொழுது எதிரே வந்த லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியது. ஷாங்பங்க்ளா என்ற இடத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த விஷ்வா தீனதயாளன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளனுக்கு வயது 18 ஆகும். அவருடன் சென்ற மற்ற வீரர்கள் பலத்த காயமடைந்துள்ளதால் அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், விஷ்வா தீனதயாளனின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ, மேகாலயா முதலமைச்சர் கொன்ராட் சங்கா, டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு தலைவர் துஷ்யந்த் சவுதாலா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்த விஷ்வா தீனதயாளனின் குடும்பத்திற்கு ஹரியானா துணை முதலமைச்சர் ரூ. 5 லட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார்.