2022ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2-க்கு மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ஆம் தேதியான இன்று வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் பணியாளர் தேர்வு ஆணையம் அறிவித்திருந்தது. அதனையடுத்து, ஆசிரியர் வேலையை எதிர்பார்த்து காத்திருந்த பி.எட் உள்ளிட்ட படிப்புகளை படித்தவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். இந்தநிலையில், தேர்வுக்கு 12ஆம் தேதி காலை வரை 3.41 லட்சம் தேர்வர்கள் கட்டணம் செலுத்தி விண்ணப்பம் செய்துள்ளனர். விண்ணப்ப அவகாசம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், இணையதளம் தாமதமாக செயல்படுவதாக தேர்வர்கள் சிலர் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஒரே நேரத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க முயற்சித்ததால், சர்வர் கோளாறு ஏற்பட்டதாகவும், எனவே அந்த பேண்ட்வித் உயர்த்தப்பட்டிருப்பதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்திருந்தது. TET – காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கைவித்து சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி டுவீட் செய்துள்ளார். அதில், ”ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். ஆனால் கடந்த மூன்று நாட்களாக தேர்வு வாரியத்தின் இணையதளம் சரிவர இயங்காமல் உள்ளது, எனவே விண்ணப்பிக்கும் தேதியை மேலும் ஒரு வாரம் கால நீட்டிப்பு செய்திட இந்த அரசை வலியுறுத்துகிறேன்” என்று கூறி தமிழக அரசையும் முதலமைச்சரையும் டேக் செய்து பதிவிட்டுள்ளார்.