கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மாவட்டத்திலும், கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளன.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பதால் அணைகளின் பாதுகாப்பு கருதி இரு அணைகளில் இருந்தும் உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 2 ஆயிரத்து 500 கன அடியாக திறக்கப்பட்ட நீர் நேற்று முன்தினம் 12ஆயிரத்து 500 கன அடியாக உயர்த்தப்பட்டது.
பின்னர் நேற்று மதியம் 18 ஆயிரம் கன அடியாக திறக்கப்பட்டது. அதன் பிறகு மாலையில் 22 ஆயிரம் கன அடியாக திறக்கப்பட்டது. இதையடுத்து காவிரியில் திறக்கப்பட்ட உபரிநீர் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் இரு மாநில எல்லையான பிலுகுண்டு பகுதியை வந்தடைந்தது. அப்போது வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து மாலை 6 மணிக்கு 3 ஆயிரம் கன அடியானது.