கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடித்த படம் ‘ஜிகர்தண்டா’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படத்தில், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் வெளியாகி ரசிகர்களிடையேயும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகை நிமிஷா சஜயன் நாயகியாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்குத் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முதலில் மதுரையிலும் பின்னர் சென்னையிலும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்காக பிரத்யேக வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்ததும் இப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.