சபாநாயகராக பதவியேற்ற போது என்னை அறியாமல் கண்கள் கலங்கியது என்று கூறியுள்ளார் முன்னாள் சபாநாயகர் தனபால். எம்ஜிஆரின் செல்லப்பிள்ளையாக இருந்து ஜெயலலிதாவின் குட் புக்கில் இடம் பெற்றதால் அமைச்சராக, சபாநாயகராக பதவிகளை அலங்கரித்தவர். மாமன்னன் படம் வெளியான நாளில் இருந்தே ஊடகங்களில் அதிகம் பேசப்படுகிறார் தனபால். தனது அரசியல் பயணங்களை தனியார் ஊடகத்திற்கு பேட்டியாக அளித்துள்ளார். மாமன்னன் படம் பற்றி பேசிய தனபால், நான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவராக இருப்பதால் அந்த கதையின் முடிவு அப்படி இருப்பதால் என்னைப்பற்றி கதை என்று சொல்கின்றனர். நான் இன்னமும் படம் பார்க்கவில்லை. அம்மா எனக்கு இத்தனை பதவி கொடுத்தனர். என்னை சார்ந்துதான் இந்த படம் தயாரித்து உள்ளனர் என்றால் அது அம்மாவிற்கு கிடைத்த வெற்றி. என்னுடைய கதை என்று ஜனங்கள் சொல்கின்றனர். உதயநிதி நடித்தாலும் தயாரித்தாலும் கிரெடிட் என்னவோ அம்மாவிற்குத்தான். உதயநிதி இப்போது சொன்னதை அம்மா என்னை பல ஆண்டுகளுக்கு முன்பே என்னை சபாநாயகராக சட்டசபையில் அமர வைத்தார்.
இன்றைக்கும் ஒரு சமுதாயத்தின் முன்பாக உட்கார கூட மாட்டங்கள், உட்கார அனுமதிக்க மாட்டார்களா என்ற கேள்விக்கு பதில் சொன்ன தனபால், எனக்கு அது போல நேர்ந்ததில்லை. அது போல இருந்தால் தவறு. யாராக இருந்தால் அமர வைக்காமல் பேசுவது மரியாதை இல்லை. ஊரில் சின்னச் சின்ன தகராறுகள் வரும். இது போல செய்யக்கூடாது என்று அட்வைஸ் செய்வேன் சமுதாயத்தில் இப்போது எல்லாம் படிப்பு அறிவு வந்து விட்டது. ஜனங்கள் தெளிவாக இருக்கிறார்கள். போராட வேண்டிய அவசியம் இல்லை என்றார். படிப்பின் மூலம்தான் சமுதாயத்தில் முன்னேற முடியும் என்றும் சொன்னார்.
1977ஆம் ஆண்டு 25 வயது முடிந்து 26வது வயதில் நாம் எம்எல்ஏவாக வெற்றி பெற்றேன். எம்ஜிஆர் மரணமடைந்த உடன் ஜெயலலிதா அணியில் சேர்ந்தேன். கொள்கை பரப்பு செயலாளராக ஜெயலலிதா இருந்த போது கூட்டம் போட்டேன். அதனால் அவரது பின்னால் நான் சென்றேன். சங்ககிரியில் நின்று நான் வெற்றி பெற்று அமைச்சரானேன். உணவுத்துறை அமைச்சராக கொடுத்தது காரணம் பற்றி இப்போது பேசுபொருளாகியுள்ளது. நிறைய கசப்பான அனுபவங்கள் உள்ளது அது பற்றி வேண்டாம். ஜெயலலிதா நேராக என்னை கூப்பிட்டு பேசினார். கூட்டுறவுத்துறை, உணவுத்துறை என்று கொடுத்தார். அம்மா தெளிவாக இருந்தார். நான் நன்றாக செயல்படுவேன் என்று எனக்கு பொறுப்பு கொடுத்தார். நான் துணை சபாநாயகராக இருந்து செயல்பட்டதை பார்த்தார். ஜெயக்குமார் சபாநாயகராக இருந்தார். ஒருநாள் ஜெயலலிதா கூப்பிட்டு திடீரென நீங்கதான் சபாநாயகர் தனபால் என்று சொன்னார். நான் நன்றி சொன்னேன். 2016ஆம் ஆண்டும் வெற்றி பெற்ற போது மீண்டும் சபாநாயகர் நீங்கதான் என்று சொன்னார். எதிர்கட்சிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. நீங்கள் நன்றாக செயல்படுவீர்கள் என்று சொன்னார். என்னை அறியாமல் எனக்கு கண்ணீர் வந்து விட்டது. இவ்வளவு பெரிய பொறுப்பு என்னை நம்பி கொடுக்கிறார்கள் என்று கண் கலங்கினேன். என்னை அறியாமல் நான் மரியாதையாக இருப்பேன். நான் நாற்காலியின் நுனியில் அமர்ந்த போது கூட கம்பீரமாக அமரவேண்டும் என்று சொன்னார். நான் நடந்து வரும் போது அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நிற்பார்கள். அப்போது உணர்ச்சி வசப்பட்டேன்.