சென்னை: சட்டப்பேரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தளி ராமச்சந்திரன் பேசுகையில்:- ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துப் பேசியதாவது:- ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிதி நிறுவனம் , பொதுமக்களின் முதலீடுகளுக்கு மாதம் 25 சதவீதம், 30 சதவீதம் வட்டி என கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டு, 2020 செப்டம்பர் முதல் ஒரு லட்சம் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.2,438 கோடி முதலீடு மற்றும் வட்டியை திருப்பித் தராமல் ஏமாற்றியுள்ளதாக புகார்கள் வந்துள்ளன. அந்த புகார்கள் மீது திமுக ஆட்சி வந்த பின்னர்தான், பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகள் பதிவுசெய்து 22 பேர் எதிரிகளாக சேர்க்கப்பட்டனர். அவர்களில் இயக்குநர்கள், ஏஜென்ட்கள் என 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற இயக்குநர் ராஜசேகர், உஷா ஆகியோர் மீது ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ரொக்கம் மற்றும் வங்கிக்கணக்கில் இருந்த பணம் ரூ.96 கோடியும், 93 அசையா சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.
இவ்வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அவர்களின் சொத்துகள், வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டு முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிக்கொடுக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளேன். நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.