சென்னை: குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்பது, திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். இத்திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப்.15-ல் முதல்வர் தொடங்கி வைப்பார் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இன்றளவும் ஏழை குடும்பங்களை சேர்ந்த பல பெண்கள், கிராம பொருளாதாரத்தை சுமக்கும் முதுகெலும்பாக உள்ளனர். ஒருசில இடங்களில் வேலை, ஊதியம், சமூகப் பொறுப்பில் இடைவெளி, வேறுபாடு இருந்தாலும், ஆணின் உழைப்புக்கு எந்த விதத்திலும் பெண்கள் குறைந்தவர்கள் அல்ல என்பது நிரூபிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆணுக்கு பின்னாலும், தாய், சகோதரி, மனைவி என அவரது வீட்டு பெண்களின் பல மணிநேர உழைப்பு மறைந்திருக்கிறது.
இப்படி கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரிக்கவே ‘மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரசு அங்கீகரித்தால், ஆண்களை உள்ளடக்கிய இந்த சமூகமும் பெண்களுக்கான சமஉரிமையை வழங்கும் நிலை விரைவில் உருவாகும் என்று அரசு நம்புகிறது. எனவேதான், உதவித் தொகை என்று இல்லாமல் ‘மகளிர் உரிமைத் தொகை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக பட்ஜெட்டில் ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதில் முதன்மையானது, பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைக்கும் பெண்களின் உழைப்புக்கு கொடுக்கும் அங்கீகாரம். அடுத்தது, ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் என்பது, பெண்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கை தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு அவர்கள் வாழ உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது. மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை, தேவைப்படும் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
யார் யார் பயன்பெறுவார்கள்?: நடைபாதையில் வணிகம் செய்யும் பெண்கள், அதிகாலையில் கடற்கரை நோக்கி விரையும் மீனவ பெண்கள், கட்டுமான தொழிலில் பணிபுரியும் பெண்கள், சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் பெண்கள், ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளில் பணிபுரியும் பெண்கள் என பல்வேறு வகைகளில் தங்கள் விலைமதிப்பில்லா உழைப்பை தொடர்ந்து வழங்கி வரும் பெண்கள் இத்திட்டத்தால் பயன்பெறுவார்கள்.
இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். சுமார் 1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ரூ.1,000 வழங்கும் மகத்தான ‘மகளிர் உரிமைத் தொகை’ திட்டம், தமிழகத்தின் சமூகநீதி திட்டங்களிலேயே மாபெரும் முன்னெடுப்பாக வரலாற்றில் விளங்கும் என்று தெரிவித்துள்ளார்.