புதுடெல்லி: சட்ட நிபுணர்கள் கூறியதாவது: மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி நீக்கப்பட்டுள்ளார். குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அவருக்கு ஒரு மாதம் ஜாமீன் வழங்கியுள்ளது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் பதவி நீக்க நடவடிக்கையை எதிர்த்து, குஜராத் உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்ய முடியும்.
சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தால், ராகுல் காந்தி மீண்டும் எம்.பி. பதவியைப் பெறுவார். ஒருவேளை இடைக்காலத் தடை விதிக்கப்படாவிட்டால், அடுத்த 6 மாதங்களுக்குள் வயநாடு மக்களவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும். உச்ச நீதிமன்றத்திலும் அவரால் நிவாரணம் பெற முடியவில்லை என்றால், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும். அதற்குப் பிறகு அடுத்த 6 ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது. ஒட்டுமொத்தமாக 8 ஆண்டுகள் அவர் தேர்தலில் போட்டியிட தடை ஏற்படும் என சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.
தீர்ப்பு விவரம்: கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்?’’ என்று விமர்சித்தார். இது தொடர்பாக குஜராத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி,சூரத் தலைமை நீதித் துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார்.
இந்தியக் குற்றவியல் சட்டம் 499,500 ஆகிய பிரிவுகளின்படி ராகுல்காந்தி குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம் விதிக்கப்பட்டது. மக்களவை கூட்டத் தொடரில் நேற்று காலை ராகுல் காந்தி பங்கேற்ற நிலையில், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ட்விட்டரில் ராகுல் வெளியிட்ட பதிவில், “இந்தியாவுக்காக குரல் எழுப்பி, போராடி வருகிறேன். அதற்காக எந்த விலையையும் கொடுக்கத் தயாராக உள்ளேன்” என்று தெரிவித்துள்தார்.
டெல்லி விஜய் சவுக் பகுதியில் காங்கிரஸ் உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் இணைந்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. மேலும், டெல்லியில் நேற்று மாலை காங்கிரஸ் கட்சியின் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.