நெல்லை: சமூக நலன், மகளிர் உரிமைத்துறை சார்பில் ஏழை பெண்களுக்கு திருமண உதவித்தொகை, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பாளை நூற்றாண்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி கலப்பு திருமண நிதி உதவி திட்டம், ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் உதவித்திட்டம், அன்னை தெரசா நினைவு நிதிஉதவி திட்டம் ஆகியவற்றின் கீழ் 105 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்கம் என மொத்தம் ரூ.47 லட்சம் மதிப்பில் 840 கிராம் தங்கம், பட்டப்படிப்பு படித்த 89 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.44.5 லட்சம், 16 பயனாளிகளுக்கு ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.4 லட்சத்தில் உதவிகள் என 48 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் 832 தையல் எந்திரங்களையும் சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:- திராவிட மாடல் ஆட்சியில் பெண் கல்விக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. பெண் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கினால் தான் நாடு முன்னேற்றம் அடையும். இதனால் தான் புதுமைப்பெண் திட்டத்தை முதலமைச்சர் அறிமுகப்படுத்தி பெண்களின் உயர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். நாளை மறுநாள் சட்டமன்ற கூட்டத் தொடரில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் அறிவிக்கப்படும். குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 என்பது இலவசம் இல்லை, அது பெண்களுக்கான உரிமைத்தொகை என்று கூறியுள்ளார். மேலும் இந்நிகழ்ச்சியில் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.