சென்னை: தமிழகம் முழுவதும் ‘இன்புளூயன்சா’ வைரஸ் காய்ச்சல் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. 3 வகையான இந்த வைரசால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலி போன்றவற்றால் குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் கூறியுள்ளதாவது:- மத்திய சுகாதாரத்துறை புதிய வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தி உள்ள நிலையில் அதனை பின்பற்ற தமிழக சுகாதாரத்துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. இந்த வகை வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் 7 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும். பொது இடங்களுக்கு செல்வதையும், குடும்பத்தினரிடம் நெருக்கமாக இருப்பதையும் தவிர்க்க வேண்டும். இருமல் நீர்த்துளிகள் காற்றில் பரவாமல் தடுக்க முகக்கவசம் அணிவது நல்லது. முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் எவ்வாறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 அடுக்கு முகக்கவசம் அணிவது நல்லது.
மருத்துவ பணியில் ஈடுபடும் அனைவரும் இன்புளூயன்சா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பரிசோதனை கூடங்களில் பணிபுரிவோர், மருத்துவம் சாரா பணியாளர்கள் பாதுகாப்பாக இதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தற்போது இலையுதிர் காலம் முடிந்து கோடை காலத்திற்குள் பிரவேசிக்க இருப்பதால் வெப்ப அலை பருவ நோய்கள் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
மேலும், உடல் வெப்பம் தொடர்பான நோய் பாதிப்பு இந்த பருவகாலத்தில் ஏற்படக்கூடும் என்பதால் நீர் சத்து உள்ள உணவுகள், பழங்களை அதிகம் சேர்க்கவும், வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க குடை, தொப்பி போன்றவற்றை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.