கொழும்பு: இந்தியா- இலங்கை இடையே நீண்ட காலமாக கடலில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது தொடர்பாகவும், கச்சத்தீவு சம்பந்தமாகவும் பிரசனை இருந்து வருகிறது. அவ்வப்போது கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களும் தாக்கப்பட்டு வருகின்றனர். படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் இலங்கை பாராளுமன்றத்தில் வெளியுறவுதுறை மந்திரி அலி சப்ரி பேசும் போது, நீண்ட காலமாக நீடித்து வரும் மீன்பிடி மோதலுக்கு தீர்வு காணும் வகையில் இலங்கை அரசின் முயற்சியின் ஒரு பகுதியாக தங்கள் கடற்பகுதியில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு லைசென்சு வழங்குவது குறித்து அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து இந்திய வெளியுறவுதுறை மந்திரி ஜெய்சங்கருடன் விவாதிக்கப்பட்டது. அதில், மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்தும் நாட்டின் கடல் வளம் பற்றியும் நீண்ட கால தீர்வை காண்பது இலங்கையின் முன்னுரிமை ஆகும். இதனால் இந்தியா இந்த உரிம முறையை ஒரு தீர்வாக முன் வைத்து உள்ளது. தினமும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் இந்திய படகுகள் எங்கள் கடலுக்கு வருகின்றன. இதனை எங்கள் கடற்படையால் கட்டுப்படுத்த முடியவில்லை என கூறியுள்ளார்கள்.
தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டதற்கு இலங்கையின் வட பகுதி மீனவர்கள் கடும் எதிர்பை தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக மீனவர் சங்கத்திர் கூறும் போது, இலங்கையின் வடபகுதியில் பல ஆண்டுகளாக நாங்கள் மீன் பிடித்து வருகிறோம். ஏற்கனவே இந்த பகுதியில் இந்திய மீன் பிடி படகுகளால் எங்களது தொழில் பாதிக்கப்பட்டு , பெரும் இழப்புகளையும் சந்தித்து வருகிறோம். கடந்த 15 ஆண்டுகளாக இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதியில் நுழைவதை தடுக்கும் எங்கள் போராட்டத்துக்கு இது ஒரு பின்னடைவாக இருக்கும். ஒரு சிலர் இந்த பிரச்சனையை பயன்படுத்தி இரு நாட்டு மீனவர்களையும் ஒருவருக்கொருவர் எதிராக மாற்ற முயற்சி செய்கின்றனர். இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என அவர் கூறியுள்ளார்.