கேப்டவுன்: 8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுடன் மோதும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் 2வது அரையிறுதி போட்டி இன்று நடக்கிறது. இதில் போட்டி தொடரை நடத்தும் தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.
10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா (8 புள்ளி) முதலிடமும், தென்ஆப்பிரிக்கா (4 புள்ளி) 2-வது இடமும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து (8 புள்ளி) முதலிடமும், இந்தியா (6 புள்ளி) 2-வது இடமும் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின. ‘ஏ’ பிரிவில் நியூசிலாந்து (4 புள்ளி) 3-வது இடமும், இலங்கை (4 புள்ளி) 4-வது இடமும், வங்காளதேசம் (0) கடைசி இடமும், ‘பி’ பிரிவில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட்இண்டீஸ் (4 புள்ளி) 3-வது இடமும், பாகிஸ்தான் (2 புள்ளி) 4-வது இடமும், அயர்லாந்து (0) கடைசி இடமும் பெற்று அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின.