வாஷிங்டன்: அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனத்திடம் இருந்து டாடா குழுமத்தின் ஏர் இந்தியா விமான நிறுவனம் 290 விமானங்களை வாங்க முடிவு செய்து அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கான அறிவிப்பு முறைப்படி வெளியிடப்பட்டதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் ஜோ பிடனும் தொலைபேசி வாயிலாக உரையாடினர்.
இதுகுறித்து அந்நாட்டு தலைமை செய்தித் தொடர்பாளர் ஜீன் பீர்ரி கூறியதாவது: ”இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான வியூக முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்ப உறவு குறித்து இருவரும் விவாதித்தனர். இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த க்வாட் போன்ற சர்வதேச அமைப்புகளில் இணைந்து செயல்படுவது குறித்தும் விவாதித்தார்கள்.
போயிங் 737 MAX ரகத்தில் 190 விமானங்களையும், போயிங் 787 ரகத்தில் 20 விமானங்களையும், போயிங் 777X ரகத்தில் 10 விமானங்களையும் ஏர் இந்தியா வாங்க உள்ளது. இந்த 220 விமானங்களின் மதிப்பு 34 பில்லியன் டாலராகும். இதுமட்டுமின்றி, போயிங் 737 MAX ரகத்தில் கூடுதலாக 50 விமானங்களையும், 787 ரகத்தில் கூடுதலாக 20 விமானங்களையும் ஏர் இந்தியா வாங்க உள்ளது. இதன் மொத்த மதிப்பு 45.9 பில்லியன் டாலராகும் என்று தெரிவித்துள்ளார்.