போபால்: தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம், கோவேக்சின் என்ற பெயரில் கரோனா தடுப்பூசியை தயாரித்தது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசி கரோனா பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் மக்களுக்கு செலுத்தப்பட்டது. தற்போது பூஸ்டர் தடுப்பூசியாகவும் போடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து பாரத் பயோடெக் நிறுவனம், வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது. இதற்கு இன்கோவாக் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
மேலும், அனைத்து கட்ட பரிசோதனைகளும் வெற்றி அடைந்த நிலையில், அவசர கால அடிப்படையில் இன்கோவாக் தடுப்பு மருந்தை பயன்படுத்த மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த செப்டம்பரில் ஒப்புதல் வழங்கியது. இதைத் தொடர்ந்து பூஸ்டர் டோஸாகவும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.
மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நேற்று முன்தினம் நடந்த சர்வதேச அறிவியல் திருவிழாவில் பாரத் பயோடெக் தலைவர் கிருஷ்ணா எல்லா கூறியதாவது :- மூக்கின் வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்தை வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தில் அறிமுகம் செய்ய உள்ளோம். மத்திய, மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் மருந்து ரூ.325 விலையிலும் தனியாருக்கு ரூ.800 விலையிலும் விற்பனை செய்யப்படும்.
தடுப்பூசிகளை ஒப்பிடும்போது மூக்கு வழியாக செலுத்தும் இன்கோவாக் தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் மிகவும் குறைவாகும். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பு மருந்தை செலுத்தலாம் என்று தெரிவித்துள்ளன.