கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியும், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகையும் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபுவை சந்தித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும் என்று புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரில் “நாம் தமிழர் கட்சி சார்பாக கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நடந்த ஆர்பாட்டத்தில் பேசிய சாட்டை துரைமுருகன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில், பொதுமேடையில், பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் பேசியுள்ளார். குறிப்பாகநீங்க கருணாநிதியையும் அண்ணாதுரையையும் படிச்சு வளர்ந்தவங்க . நாங்கள் தலைவர் பிரபாகரனை படிச்சு வளர்ந்த பிள்ளைகள். பெரியார், அண்ணா பிள்ளைகளுக்கு பேசத் தெரியும், எழுதத் தெரியும். பிரபாகரன் பிள்ளைக்கு என்ன தெரியும்னு காங்கிரஸ்காரனுக்கு தெரியும். ராகுல்காந்திக்கு தெரியும். சோனியா காந்திக்கு தெரியும். உங்களுக்கு தெரியும்ல.. ஶ்ரீபெரும்புதூர் ஞாபகம் இருக்குதுல்ல.. அவ்வளவுதான்டா என ஶ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்தி பேசியுள்ளார். இதே போன்ற கருத்தை இதற்கு முன்பு சீமானும் பேசியுள்ளார். தமிழகத்தில் மீண்டும் மனித வெடிகுண்டு படுகொலைகள் நடக்கும் என்றும் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று பொருள்பட பேசியுள்ளார்.
வன்முறையை, பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் தொடர்ந்து பேசிவரும் சீமானும், அவர் கட்சியினரும் தமிழகத்தில் சுதந்திரமாக செயல்பட முடிவது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நிச்சயம் ஆபத்தை ஏற்படுத்தும். எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய வயதில் உள்ள இளைஞர்களை வன்முறை மற்றும் பயங்கரவாதத்தின் பாதையில் அழைத்துச் செல்வது ஆபத்தானது. இதனால் தமிழகத்தின் அமைதியும், அப்பாவி இளைஞர்களின் எதிர்காலமும் தடம் மாறி, அழிவுப்பாதையை நோக்கிச் செல்லும் ஆபத்து ஏற்பட உறுதியான வாய்ப்புகள் உள்ளன.
இம்மாதிரியான பயங்கரமான குற்றச்செயல்களிலிருந்து தங்களை அரசியல் செல்வாக்கு காப்பாற்றும் என்கிற தைரியத்தில்தான், நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து இப்படி அத்துமீறி பேசி வருகின்றனர். இதற்கு தமிழ் மண்ணில் நாம் ஒருபோதும் இடம் தந்துவிடக் கூடாது. தமிழ்நாட்டின் அமைதியான எதிர்காலத்தில் நாம் ஒருதுளிகூட சமரசம் செய்துகொள்ளக்கூடாது.அமைதிப்பூங்காவான தமிழகத்தையும், தமிழக இளைஞர்களையும் காப்பாற்ற தமிழக அரசு உடனடியாக திரு. சீமானை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் (UAPA) கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.