சென்னை: சென்னையில் போகிப் பண்டிகையில் பழைய பொருட்கள், டயர்களை தெருக்களில் போட்டு எரிப்பார்கள். அப்போது சிறுவர்கள் மேளம் அடித்து ஆடுவார்கள். அதில் இருந்து வெளியேறும் புகை மூட்டம் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு இருக்கும். விமானங்கள் தரையிறங்க முடியாததால் திருப்பி விடப்பட்டதும் உண்டு. ஆனால் இந்த ஆண்டு போகி மாசுவை கட்டுப்படுத்த பழைய துணிகளையும், டயர்களையும், பொருட்களையும் எரிக்க வேண்டாம். நாங்கள் நேரடியாக பெற்றுக்கொள்கிறோம் என்று மாநகராட்சி அறிவித்தது. வீடு வீடாக சென்று தூய்மை பணியாளர்கள் பழையதை சேகரித்தனர்.
இன்நிலையில், கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு குறைந்த அளவிலேயே பழையதை எரித்தார்கள். தற்போது பனிக்காலம் என்பதால் அதிகாலையில் பனிப்புகை பெருமளவில் சூழ்கிறது. அத்துடன் போகிப் புகையும் இணைந்ததால் பல இடங்களில் புகை மூட்டம் அதிகமாக காணப்பட்டது. எதிரே வந்த வாகனங்கள் தெரியாதபடி புகை சூழ்ந்து இருந்தது. வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடியே சாலைகளில் பயணித்தன. சில தெருக்களில் எரித்த பிறகு சாம்பலில் தண்ணீர் ஊற்றி எடுத்து அப்புறப்படுத்தினார்கள். இந்த அளவுக்கு விழிப்புணர்வு வந்திருப்பது வரவேற்கத்தக்கது என மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.