சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு லட்சக்கணக்கானோர் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதையொட்டி, 12, 13, 14-ம் தேதிகளில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், சிறப்பு பேருந்துகளும் சேர்த்து மொத்தம் 16,932 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், 651 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்று 1.34 லட்சம் பேர் சென்னையிலிருந்து வெளியூர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
இதேபோல, சென்னையில் இருந்து நேற்று 1,855 சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பயணிகளைப் பாதுகாப்பாக அனுப்பிவைக்கும் பணிகளில் போக்குவரத்துத் துறையினரும், திருட்டு சம்பவங்களைத் தடுக்கும் பணியில் போலீஸாரும் ஈடுபட்டனர்.
கடந்த 2 நாட்களில் ரயில்களில் 2.50 லட்சம் பேர், அரசுப் பேருந்துகளில் 3.50 லட்சம் பேர், ஆம்னி பேருந்துகளில் 1 லட்சம் பேர் என சுமார் 7 லட்சம் பேர் பயணம் செய்தனர். இதுதவிர, வேன்கள், சொந்த வாகனங்கள் மூலம் சென்னையில் இருந்து ஏராளமானோர் வெளியூர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர். இன்றும் சிறப்புப் பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படுகின்றன.
புகார் தெரிவிக்க…: பேருந்து இயக்கம் குறித்து அறியவும்,புகார் தெரிவிக்கவும் 94450 14450, 94450 14436 என்றஎண்களிலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகார்களுக்கு 1800 425 6151, 044 24749002, 26280445, 26281611 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.