புதுடெல்லி: மேரியான் பயோடெக் நிறுவனம் Dok-1 Max என்ற இருமல் மருந்து உள்பட பல்வேறு மருந்துகளை தயாரித்து வருகிறது. Dok-1 Max மருந்தை எடுத்துக்கொண்டதால் தங்கள் நாட்டில் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் அரசு சமீபத்தில் குற்றம்சாட்டியது. மேலும், மேரியான் பயோடெக் நிறுவனத்திற்கு எதிராக அந்நாட்டு அரசு வழக்கு தொடுத்துள்ளது.
இதையடுத்து, நொய்டாவில் உள்ள அந்நிறுவனத்திற்குச் சென்ற மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள், அங்கு உற்பத்தி செய்யப்பட்டு வந்த Dok-1 Max மருந்தை நேற்று முன்தினம் ஆய்வுக்கு அனுப்பினர்.இதன் முடிவுகள் நேற்று கிடைக்கப்பட்ட நிலையில் மருந்தில் கலப்படம் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, Dok-1 Max மருந்து உள்பட அனைத்து மருந்து தயாரிப்பையும் நிறுத்த உத்தரவிடப்பட்டது.
இதனை தனது ட்விட்டர் பதிவில் இன்று தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மேரியான் பயோடெக் நிறுவனத்தில் நேற்று இரவு முதல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.மேலும், அந்நிறுவனத்தின் மீது விசாரணை நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.