அமெரிக்காவில் வளி மண்டல அழுத்தம் திடீரென குறைந்ததால் பல்வேறு மாகாணங்களில் வெடிகுண்டு சூறாவளி எனப்படும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது.மேலும், வரலாறு காணாதபனிப்புயலால் அந்நாட்டு மக்கள் பெரும்
அவதிகுள்ளாகி வருகின்றனர்.
கடந்த 2 நாட்களாக சூறாவளி காற்றுடன் அங்கு வீசி வரும் பனிப்புயல் அமெரிக்காவை புரட்டி போட்டு உள்ளது. மைனஸ் 48 டிகிரி செல்சியசில் குளிர் வாட்டி வருவதால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ரோடுகளில் பல அடி உயரத்துக்கு பனி மூடிக்கிடப்பதால் நெடுஞ்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன.2ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
மேலும், பல மாகாணங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதால் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் இருளில் மூழ்கி கிடக்கிறது. அவசர உதவிக்கு கூட ஆம்புலன்சுகள் செல்ல முடியாத நிலை உள்ளது. பனிப்புயலில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பனியால் உறைந்து கிடக்கும் கார்கள் மற்றும் ரோடுகளில் பலர் உயிர் இழந்து பிணமாக கிடக்கின்றனர். பனிபுயலுக்கு இறந்தவர் எண்ணிக்கை 34ஆக உயர்ந்து உள்ளது. ஒக்ல ஷேமா, கென்டக்கி, மிசோரி, நியூயார்க், கொலரோடா உள்ளிட்ட மாகாணங்களில்தான் உயிர் இழப்புகள் அதிகமாக உள்ளது. அமெரிக்காவை உலுக்கி வரும் பனிப்புயலால் நேற்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும் களை இழந்தது. வாகன போக்குவரத்து மற்றும் விமான போக்கு வரத்து எதுவும் இல்லாததால் பொதுமக்களால் எங்குமே செல்ல முடியத நிலை ஏற்ப்பட்டு, மிகவும் மோசமான சூழ்நிலையை சந்தித்து வருகின்றனர்.