பெங்களூரு: முதல்வர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெங்களூரு, மங்களூரு உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி, திரையரங்கம், குளிரூட்டப்பட்ட அறைகள் உட்பட உள் அரங்குகளில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மெட்ரோ ரயில், பேருந்து ஆகியவற்றிலும் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சளி, காய்ச்சல், இருமல் ஆகிய அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருவோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கிறிஸ்துமஸ், புத்தாண்டை பொதுமக்கள் உரிய கட்டுப்பாடுகளுடன் கொண்டாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.