திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடையக்கோட்டையில் பசுமை தமிழகம் திட்டத்தில் உலக சாதனை நிகழ்ச்சியாக 6 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதற்காக இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 117 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் கடந்த 3 மாதங்களாக சீரமைக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று 6 லட்சம் மரக்கன்றுகளை 4 மணி நேரத்தில் நடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்து நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 6 லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் என 16 ஆயிரம் பேர் பங்கேற்று மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டனர். இதன் பயனாக சுமார் 2 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதனை உலக சாதனையாக அங்கீகரித்து அதற்கான சான்றிதழை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோரிடம் எலைட் உலக சாதனை பதிவு நிறுவனத்தினர் வழங்கினர்.
இவ்விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: 6 லட்சம் மரக்கன்றுகளை 4 மணி நேரத்தில் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 2 மணி நேரத்திலேயே 6 லட்சம் மரக்கன்று நட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வன பரப்பளவு 27 சதவீதமாக இருக்கிறது. அதை 10 ஆண்டுகளில் 33 சதவீதமாக உயர்த்த இலக்கு வைத்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இதில் பொதுமக்களும் ஆர்வமுடன் பங்கெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.