சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் இன்று அதிகாலை 3 மணியளவில் முற்றிலுமாக மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தாலும் கடல் சீற்றத்துடனேயே காணப்படுகிறது. புயல் கரையை கடந்தாலும் இன்று காலை 9.30 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று மதியம் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக காஞ்சிபுரத்தில் 18 செ.மீ. மழை, குன்றத்தூரில் 15 செ.மீ மழை மற்றும் உத்திரமேரூரில் 14 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மின்னல், பணப்பாக்கத்தில் 20 செ.மீ. மழை பதிவானது.புயல் எதிரொலியாக தலைநகர் சென்னையில் சுமார் 400 மரங்கள் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணியை சென்னை மாநகராட்சி சார்பில் ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்: “மாண்டஸ் புயலை மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் அரசு சிறப்பாக எதிர்கொண்டது. சென்னையில் 400 மரங்கள் விழுந்தன. அவற்றை அப்புறப்படுத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் மழை நீர் தேங்கவில்லை. 16 சுரங்கப்பாதைகளும் பயன்பாட்டில் உள்ளன. சைதாப்பேட்டையில் வீடு இடிந்துவிழுந்த நிகழ்வில் இருவர் கவலைக்கிடமாக உள்ளனர்.
புயல் கரையைக் கடந்தாலும் கூட மழை நீடிப்பதால் இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.