சென்னை : தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் புதிய அறிவிப்புகளை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார். அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:- தமிழ்நாட்டில், மாநில வாணிப கழகத்தில் (டாஸ்மாக்) 31.3.2023 நிலவரப்படி மொத்தம் 5 ஆயிரத்து 329 சில்லரை விற்பனை மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் இந்த ஆண்டு 500 மதுக்கடைகள் மூடப்படும். கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ளச்சந்தை மது விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களின் மறுவாழ்வுக்கு நிதி வழங்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் எரிசாராயம், போலி மதுபானம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து கடத்தப்படும் மதுபாட்டில்கள் ஆகியவற்றை கைப்பற்றுவதில் பெரும் பங்கு வகிக்கும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் மாவட்ட, நகர சட்டம் மற்றும் ஒழுங்கு போலீசாரை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ரூ.15 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. 2023-24-ம் நிதி ஆண்டில் இந்த ஊக்கத்தொகை ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். இது பற்றி ரகசிய தகவல் அளிக்கும் உளவாளிகளுக்கு வழங்கப்படும் வெகுமதி தொகை ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
‘டாஸ்மாக்’ சில்லரை விற்பனை பணியாளர்கள் மற்றும் இதர அலுவலர்கள் பணியின் போது மரணம் அடைந்தால் வழங்கப்பட்டு வரும் குடும்ப நல நிதி உதவித்தொகை ரூ.3 லட்சத்தில் ரூ.5 லட்சமாக 1.4.2023 முதல் உயர்த்தி வழங்கப்படும். கிராமம் மற்றும் நகர பஞ்சாயத்து பகுதிகளில் அமைந்துள்ள மதுபான சில்லரை விற்பனை கடைகளின் பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த நிதி ஆண்டில் 1,000 மதுக்கடைகளில் ரூ.10.3 கோடி செலவில் பண பாதுகாப்பு பெட்டகங்கள் நிறுவப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.